Friday, 23 May 2014

சுனாபன் வரலாறு :

நான் கின்னரரின் அரசன். ஒரு நாள் நான் என் மனைவியோடு கயிலைக்குச் சென்றேன். அம்மை அப்பர் தங்கியிருந்த புனிதமான அழகிய சோலைக்குள் மயக்க உணர்வோடு போனேன். அதன் புனிதத்தைக் கெடுத்தேன். இதை உணர்ந்த சிவபெருமான் சினங்கொண்டு என்னை நிலவுலகில் மனிதனாகப் பிறந்து பிறவிக் கடலில் வீழ்ந்து துன்புறுமாறு சபித்தார். சாபம் பெற்ற நான் சாப நீக்கம் வேண்டிப் பெருமானைப் பணிந்தேன். சிவபெருமானும் கருணை கூர்ந்து 'என்னுடைய மானதபுத்திரன் தேவல முனிவன் உலகநலங்கருதி அவதாரம் செய்கிறான். அவன் ஆமோத நகருக்கு வருவான். அவனை வரவேற்று அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு. அப்போது உன் சாபமும் நீங்கும்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி நான் இந்நிலவுலகில் பிறந்து இந்நாட்டைப் புரக்கும் மன்னனாக இதுவரை வாழ்ந்து வந்தேன். தங்கள் வரவால் என் சாபம் நீங்கியது. இறைவன் ஆணைப்படி ஆட்சியைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இனி நான் என்னுடய நாட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு மானிட உடம்பை அங்கேயே கிடத்திவிட்டு, தேவவடிவம் பெற்று அப்போது அங்கு வந்த விமானத்தின் மீது தன் மனைவியோடு வித்தியாதர உலகம் சேர்ந்தான். சுனாப மன்னனும் அவன் மனிவியும் விட்டுச் சென்ற பூத உடம்புகளுக்கு தேவலமுனிவர் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தார். பின் ஆமோத நகரை செங்கோன் முறைப்படி நீதி வழுவாது நல்லாட்சி செய்து வந்தார்.
தேவலர் கருவிகள் பெற்றது :

ஆட்சியை ஏற்று செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திய தேவலர் தாம் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தார். உடனே சுபுத்திமான், காரியதக்கன், நீதிவேந்தன், தீர்க்கதரிசனன் என்னும் நான்கு அமைச்சர்களையும் அழைத்து "நான் ஆடைகள் நெய்வதற்கு வேண்டிய கருவிகளை பெறுவதற்காக மயனிடம் செல்கிறேன். நான் வரும் வரை நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்யுங்கள்" என்று பணித்து விட்டு மேரு மலையை நோக்கிப் புறப்பட்டுப் போனார்.
கபிஞ்சலன் சாபம் களைந்தது :

காடும் மலையும் கடந்து செல்லும் போது ஒரு அடர்ந்த காட்டினிடைக் கொடிய சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டது. தேவலரைக் கண்டதும் அவர் மீது பாய்ந்து தாக்கியது. உடனே தேவலர் சிங்கத்தின் மீது பல அம்புகளை எய்து அதை வீழ்த்தினார். அப்போது சிங்கம் வீழ்ந்த இடத்தில் புனிதமான உடலோடு ஒருவன் ஒரு வானவூர்தியில் ஏறக்கண்டார். அதைக் கண்டு பெரிதும் வியப்புற்ற தேவலர் ' நீ யார்? ' என வினவினார். அவன் நான் குபேரனின் அலுவலரில் ஒருவன். என் பெயர் கபிஞ்சலன் என்பது. ஒரு நாள் நான் வேட்டைக்குப் போனேன். அங்கு அழகான மான் ஒன்றைக் கண்டேன். அதன் மீது அம்பை எய்தினேன். அம்பின் அடிபட்ட மான் காயமுற்று அருகிருந்த ஆசிரமத்திற்குள் பாய்ந்து ஓடியது. அது கௌதம முனிவரின் ஆசிரமம் ஆகும். நான் அடிபட்ட மானைத் துரத்திக்கொண்டு ஆசிரமத்துக்குள் போனேன். அடிபட்ட மானையும் அதைத் தொடர்ந்து என்னையும் கண்ட கௌதம முனிவர் பெரிதும் சினங்கொண்டு என்னைச் சிங்கமாக ஆகுமாறு சபித்தார். சாபத்தைப் பெற்ற நான் அச்சமுற்று முனிவரை வணங்கி மன்னிக்குமாறும் சாபவிமோசனம் அளிக்குமாறும் வேண்டினேன். அவரும் சினந்தணிந்து இரங்கி, தேவலமுனிவரால் உன்சாபம் நீங்கும் என்று அருளினார். சாபத்தால் சிங்கமாய்ப் பல விலங்குகளை அடித்துத் தின்று வந்த நான் இன்று தங்களால் சாபநீக்கம் பெற்றேன். தாங்கள் இக்காட்டின் வடக்கே மூன்று யோசனை தூரத்தில் உள்ள வாலகில்லிய முனிவர் ஆசிரமத்துக்குப் போய் அம்முனிவரை தரிசித்துக் கொண்டு உங்கள் பிரயாணத்தைத் தொடருங்கள். என்று கூறி விமானமேறி விண்ணிடை மறைந்தான்.
உருத்திர தனுவன் தேவருலகம் சேர்தல் :

அதன் பின் தேவல முனிவர் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். கங்கைக் கரையை அடைந்தார். இது சூரிய குலத்து வந்த பகீரதன், தன் முன்னோர்களான சகர மன்னர்கள் 100 பேர் தாம் பெற்ற சாபம் நீங்கி நற்கதி அடையத் தவமியற்றி உலகுக்குக் கொணர்ந்த புனற்கங்கையாகும். இது தன்னில் நீராடுவோரின் பாவங்களைப்போக்கி நற்கதி அடையச் செய்யும் புனிதமுடையது. இப்பெரும் புனற்கங்கையில் தேவலர் நீராடி நாட்கடன்களை முடித்துக் கொண்டு மூன்று நாட்கள் தங்கினார். பின் பிரயாணத்தை தொடங்கி வாலகில்லிய ஆசிரமத்தை அடைந்தார். ஆசிரமம் எங்கனும் ஏராளமான நறுமணப்பூக்கள் பூக்கும் மரங்களும் செடிகளும் நிரம்பி இருந்தன. மலர்ச்சோலையும் அழகிய வாவிகளும் நிரம்பிய அந்த ஆசிரமம் அமைதிச் சின்னமாய் இருந்தது. பகையே அங்கு இருக்கவில்லை. பாம்பும் மயிலும், சிங்கமும் யானையும், கழுகும் புறாவும் பகையின்றி அருகருகு இருந்து வசித்தன. வேத ஒலி ஒலித்தன. நாகணவாய்ப் பறவைகளும் வேதம் ஓதின. இவ்வாறு தெய்வமணம் கமழும் ஆசிரமத்துள் சென்ற தேவலர் வாலகில்லிய முனிவரை அணுகி வணங்கி, அவரது ஆசி பெற்று அவரருகே அமர்ந்தார். ஆசிரமவாசிகளின் நலம் பற்றி வினவினார். அதற்கு வாலகில்லிய முனிவர் எங்கள் யாக கர்மங்கள் சிவபெருமான் திருவருளால் செவ்வனே நடைபெற்று வருகின்றன. எனினும் அண்மையில் ஒரு துன்பம் நேர்ந்துள்ளது. இந்த வனத்தில் இரண்டு காததூரத்தில் ஒரு மலைக்குகையில் குண்டிகன் என்னும் அசுரன் வசிக்கின்றான். அவன், மலை போன்ற திரண்ட தோள்களும் கோரப்பற்களும் உடையவன். மூன்று உலகங்களையும் அழிக்க வல்ல சூலம் ஒன்றையும் ஏந்தி உள்ளான். பாபமே வடிவான அவன் அழிந்தாலன்றி நாங்கள் இங்கு அமைதியாக வாழமுடியாது. அவன் தவ வலிமையாலும் அடக்க முடியா வல்லமை உடையவனாயுள்ளான். முனிவர்களின் துன்பத்தைக் களைந்து காப்பது மன்னனின் கடமை அல்லவா? தாங்கள் தான் அந்த அசுரனை அழித்து இக்கானகத்தில் வாழும் எங்களுக்கு அமைதியைத் தேடித் தரவேண்டும் என்றார். இதைக் கேட்ட தேவலர் ' உங்கள் துயர் தீர அந்த அசுரனைக் கொன்று வருவேன்' என்று கூறி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போர்க்கருவிகளை எந்தியவராய் போர்க்கோலம பூண்டு குண்டிகன் என்னும் அசுரன் இருக்கும் மலைக்குகையைத் தேடிச் சென்றார். குகையையும் அடைந்தார். அங்கு அசுரன் நாள் தோறும் பல உயிர்களைக்கொன்று தின்று எறிந்த பிணங்களும் எலும்புகளும் மலை போல் குவிந்திருக்கக் கண்டார். பெரிதும் திடுக்கிட்டார். " இந்த அசுரனை இப்போதே அழிப்பேன் " அது என் கடமை " என்றவாறு வில்லெடுத்து நாணேற்றி குணத்தொனி செய்தார். நாணொலி கேட்ட அசுரன் சினத்துடன் சூலபாணியாய் வெளியே வந்து தேவல முனிவரைக் கண்டு கடுமையாக எதிர்த்தான். தேவலர் பலவித ஆயுதங்களைக் கொண்டு அரக்கனோடு நீண்டநேரம் போரிட்டார். முடிவில் அர்த்தசந்திர பாணம் ஒன்றால் அரக்கனின் தலையை அறுத்து வீழ்த்தினார். அப்போது இறந்த அரக்கனின் உடம்பிலிருந்து வீரன் ஒருவன் வெளிப்பட்டு விமானம் ஒன்றில் ஏறக்கண்டார்.அதிசயித்து அவனைப் பார்த்து " நீ யார்? " என்று வினவினார். அவன் நான் விசாலமாபுரி மன்னன். உக்கிரதனுவன் என்பது என் பெயர். என்னுடைய நாட்டைத் துன்புறுத்தி வந்த விகடன் என்ற அரக்கனைக் கொன்றேன். அவனுடைய அண்ணன் கற்கடன் என்பவன் என்னைப் பழி வாங்கும் எண்ணத்தில் என்னிடம் கபடமாகச் சமையற்காரனாகச் சேர்ந்தான். ஒரு நாள் துர்வாச முனிவர் என்னைக் காண வந்தார். அவருக்கு அறுசுவை உண்டி அளிக்குமாறு சமையற்காரனைப் பணித்தேன். தூர்வாச முனிவர் முன்கோபத்துக்குப் பேர்போனவர். இதை அறிந்திருந்த கபட நாடக கற்கடன் அதுவே என்னைப் பழிவாங்குவதற்கு ஏற்ற தருணம் என்பதை ஓர்ந்து நரமாமிசத்தைச் சமைத்து தூர்வாச முனிவருக்குப் படைத்தான். இத்தீய செயலைக் கண்ட முனிவர் என்மீது சினங்கொண்டு நரமாமிசம் தேடி அலையும் அரக்கன் ஆகும் படி சபித்தார். நான் பெரிதும் துன்புற்று அவரை வணங்கிச் சாப விமோசனம் வேண்டிப் பணிந்தேன். அவரும் இரங்கித் தங்களால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருள் செய்தார். சாபத்தின் காரணமாய் அரக்கனாகி இதுவரை பல உயிர்களைக் கொன்றும் துன்புறுத்தியும் பாபச் சேற்றில் மூழ்கியிருந்தேன். கருணாமூர்த்தியாகிய தங்களால் இன்று நான் சாபவிமோசனம் பெற்றேன். விடை பெறுகிறேன் " என்று கூறி விமானமேறி விண்ணுலகம் சென்றான். பின் தேவலமுனிவர் வாலகில்லிய முனிவரிடம் சென்று அரக்கனைக் கொன்ற செய்தியை அறிவித்து அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வடக்கிருக்கும் மேருமலையை நோக்கிச் சென்றார். பன்னாள் நடந்து சென்று மேருமலையை அடைந்தார். அங்கிருக்கும் தேவதச்சன் என்னும் மயனைச் சந்தித்தார். அவரிடம் தாம் துணி நெய்வதற்கான உபகரணங்களைப் பெற்றுப் போக வந்ததாகக் கூறினார். தேவதச்சனும் மகிழ்ச்சியோடு துணி நெய்வதற்கு வேண்டிய படமரங்கள், பலகைகள், தோற்கேடயங்கள், பண்ணையங்கள், தண்டங்கள், நாடாக்கள், திரிகைகள், திருவட்டம், விடுவாய் முதலிய கருவிகளை அளித்து அவற்றின் பெருமையையும் கூறினார். படமரம் முதலிய கருவிகள் தேவைக் கேற்றவாறு குறுகவும் நீளவும் செய்யுமென்றும், நாடா, நூலை விரும்பிய நிறத்தில் அளிக்கும் என்றும் கூறி, எப்பகையையும் வெல்ல வல்ல வாளையும் எட்டு பாணங்களையும் அளித்தார். இவற்றை எல்லாம் நன்றிப் பெருக்கோடு பெற்றுக் கொண்ட தேவலர் அங்கிருந்து இடுக்கண் இன்றி நாடு திரும்பினார்.

Wednesday, 21 May 2014

தேவலர் வரம் பெறல் :

சிவபெருமானின் ஆணையை ஏற்ற தேவலன் அன்னையை அணுகி] அவர் அருள் வேண்டி நின்றான். அம்மையும் "நீ மேற்கொண்டுள்ள அரும்பணிக்கு பல இடர்கள் வரும். அப்போது என்னை நீ நினை. நான் தோன்றி உன் இடர்களைந்து உன்னைக் காக்கிறேன். "என்று ஆசி கூறி அனுப்பினார். தேவல முனிவன் திருவருள் துணைகொண்டு திருமாலிடம் சென்றான். பாற்கடலை அடைந்தான். அதனருகே தவஞ்செய்வதற்கேற்ற அழகான பூஞ்சோலை இருக்கக் கண்டான். அதில் மா,பலா முதலிய பழ மரங்களும், மல்லிகை முல்லை செண்பகம் போன்ற நறுமணங் கமழும் பூச்செடிகளும் நிரம்பி இருந்தன. அதனால் அதுவே தவத்திற்கேற்ற இடமெனத் தேர்ந்து அங்கு தங்கினான். அரவணை பள்ளிகொள்ளும் பரந்தாமனை நோக்கிப் புலனொடுக்கி ஒருமை மனதோடு பலநாள் கடுந்தவஞ் செய்தான். " அரிய ஐம்புல னலைவுற வகையமைத் தடக்கித் திரித குங்கறுத் தின்றிமேல் வழிமனஞ் சேர்த்துப் பரிதி வெங்ககி ராழியம் பரமனைப் பரவிப் புரிவ ரும்பெரு மாதவம் பலபகல் புரிந்தான் " தேவல முனிவனின் தவத்திற் கிணங்கி திருமாலும் முனிவன் முன் தோன்றி அவன் விரும்பிய தமது உந்திக் கமல நூலைக்கொடுத்து ஆசி கூறி அனுப்பினார். நூலைப் பெற்றுக்கொண்டு தேவலமுனிவன் திரும்பி வரும் வழியில் சம்புத் தீவில் கடற்கரை அருகில் மாய ஆசிரமம் ஒன்றைக் கண்டான். அங்கிருந்த தவசிகள் முனிவர் வேடம் தரித்த அரக்கர்கள் என்பதை இவன் அறியாது உள்ளே போனான். அங்கிருந்த கபட வேடதாரிகளின் தலைவனை வணங்கினான். அவன் தேவல முனிவனை வரவேற்று ' நீ யார்? பெயரென்ன? இவண் வந்த காரணம் யாது?' என்று கேட்டான். தேவலமுனிவன் வஞ்சகரின் கபட நெஞ்சை அறியாது தனது வரலாற்றையும் துணி நெய்யத் தான் திருமாலிடம் நூல் பெற்று வந்ததையும் கூறினான். இதைக்கேட்ட அக் கபட முனி ' அப்பனே! நீ மேற்கொண்டுள்ள அருட்பணி பெரிதும் போற்றுதற்குரியது. நீ மிகவும் களைத்திருக்கின்றாய். இன்று இரவு இங்கு தங்கி இளைப்பாறிப் போவாயாக ' என்று மொழிந்தான். முனிவனின் விருபத்திற் கிணங்கி அன்றிரவு அங்கு தங்கினான். தீயவர் உள்ளம் போன்று இரவு வந்தது. காரிருள் சூழ்ந்தது. தவச்சாலையில் தவவேடத்தில் இருந்த வச்சிர முஷ்டி, புகைமுகன், புகைக் கண்ணன், சித்திரசேனன், பஞ்சசேனன் என்னும் அரக்கர் தலைவர்களும் அவர்களுடைய துணைவர்களும் சுய உருக்கொண்டனர். வாள், வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தினர். தேவல முனிவனைக் கொன்று அவனிடமுள்ள நூலை அபகரித்துக்கொள்ள எண்ணி அவனைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்தினர். தேவலன் திருமாலை உள்ளம உருக எண்ணித் துதித்தான். ஆபத் பாந்தவனாகிய பரந்தாமன் சக்கரப்படையை அனுப்பினார். வந்த ஆழிப்படையை தேவல முனிவன் அசுரர்கள் மீது ஏவினான். அப்படை அசுரர்களின் உடம்பைத் தலைவேறு கைவேறாக அறுத்துத் தள்ளியது. அறுபட்ட உடம்புகளிலிருந்து இரத்தம் சிந்தியது. சிந்திய இரத்ததிலிருந்து எண்ணில் அடங்கா அசுரர்கள் தோன்றி போரிட்டனர். அதனால் போரில் சக்கரப்படை இளைத்தது. அரக்கத் தலைவர்கள் ஐவரும் தேவல முனிவனைச் சூழ்ந்து கொண்டு மிகக் கடுமையாகத் தாக்கினர். இவர்களுடைய தாக்குதலுக்கு ஆற்றாது முனிவன் பெரிதும் தளர்வுற்றான். அந்நிலையில் முனிவன் அம்மையை எண்ணித் துதித்தான். உற்ற இடத்து உதவும் அம்மையும் கோடி சூரியப்பிரகாசம் பொருந்திய கீரிடம் தரித்தவராய் சிங்கவாகனத்தில் சூல பாணியாய்த் தோன்றினார். ஆணவங்கொண்ட அசுரர்கள் அம்மையையும் எதிர்த்துப் போரிட்டனர். அம்மையின் கீரிடத்தின் ஒளிபட்டுப் பலர் மயங்கி வீழ்ந்தனர். அம்மைக்கும் அசுரர்களுக்கும் பெரும் போர் நடந்தது. அப்போது அம்மையின் சூலப்படையால் தாக்குண்டு அசுரர்கள் வீழ அவர்கள் உடம்புகளிலிருந்து சிந்திய இரத்தத்தைச் சிங்கம் குடிக்க அசுரப்படைகள் யாவும் மடிந்தன. இவர்களின் தலைவர்கள் ஐவர் இறுதி வரைப்போரிட்டு முடிவில் அம்மையின் சூலப்படையால் தாக்குண்டு வீழ்ந்தனர். இவர்கள் குருதியில், முனிவன்தான் துணி நெய்யக் கொண்டு வந்திருந்த நூலைத் தோய்க்க அந்நூல் ஐந்து நிறங்களைப் பெற்றது. போரின் போது அசுரர்கள் சிந்திய இரு துளிகள் சிங்கத்தின் இருகாதுகளில் தங்கின. சிங்கம் தலையைக் குலுக்கவும் காதுகளிலிருந்த இரண்டு இரத்தத் துளிகள் பூமியில் வீழ்ந்தன. அப்போதே அவற்றிலிருந்து இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க அம்மை சூலத்தை ஏந்தவும் அசுரர்கள் இருவரும் தம்மைக் காத்து ரட்சிக்குமாறு முனிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். முனிவனும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களைக் குலப்பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டான். இவர்கள் தேவாங்க குலமக்களுக்குத் தொண்டு செய்யும் சிங்க குலத்தார் ஆயினர். இனி ஒளி பொருந்திய கீரிடத்தைத் தாங்கியிருந்ததால் அம்மை 'சவுடநாயகி' ஆனார். சௌடேஸ்வரியம்மன், நினைத்தபோது உதவிக்குவருவதாக தேவல முனிவனுக்கு வரமருளினார். மேலும், 'அமாவாசையன்று நீ அசுரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு என்னை உளமார நினைத்தாய். நானும் வந்து உன்னைக் காத்தேன். ஆதலால் இந்த நாள், இந்த உலகில் நீ பிறந்த நாளாகும். உன்னைக்காக்க நான் தோன்றிய இந்த நாள் எனக்கும் பிறந்த நாளேயாகும். ஆதலால் இனி நீ இந்த அமாவாசை நாட்களில் என்னை நாள் முழுவதும் தியானித்து வழிபாடு செய்வாயாக. அவ்வாறு செய்தால் உனக்குப் பெருவல்லபமும சிறப்பும் பெருகும். உன் குலத்தாரும் நலம் பெறுவர். உன் குலமக்கள் அன்று நெய்வதை விட்டு என்னைப் பூசித்து, என் புகழைச் சிரவணம் செய்து வந்தால் அவர்களும் எல்லா நன்மைகளையும் அடைவர். அவ்வாறின்றி என்னை மறந்திருந்தால் அவர்கள் துன்பத்தில் ஆழ்வர்.' என்று சொல்லி மறைந்தார். பின் தேவலன் ஆமோத நகரை நோக்கிப் போனான். இனி ஐந்து அசுரர்களின் குருதியில் நூலைத் தோய்க்க அது ஐந்நிறம் கொண்டதற்கும், சக்கரப்படையால் அவர்கள் அழியாததற்கும் வரலாறு உண்டு. அது வருமாறு அசுரர்கள் ஐவரின் வரலாறு ஒரு காலத்தில் ஊழி நிகழ்ந்தது. உலகம் நீரில் மூழ்கியது. நீர்மீது கார்முகில் வண்ணன் ஆலிலையில் அறிதுயிலிருந்தான். அப்போது அவன் உடம்பு வியர்த்தது. வியர்வையிலிருந்து வச்சிரமுஷ்டி முதலான் ஐந்து அரக்கர்கள் தோன்றினர். தாங்கள் தோன்றுதற்கே காரணனாயிருந்த மாயவனையே கொல்ல முயன்றனர். இதையறிந்த மாயவன் துயில் நீங்கி அசுரரை எதிர்த்தான். பெரும்போர் மூண்டது, மூண்டபோர் ஓராண்டு நடந்தது. அசுரர்களின் பெரும் பலத்தை அறிந்த திருமால் தந்திரமாக அவர்களை வெல்லக்கருதி "அன்பர்களே! உங்கள் போர்த்திறங்கண்டு மகிழ்ந்தோம். நீங்கள் விரும்பிய வரம் யாது?" எனக்கேட்டார். இது கேட்ட அசுரர்கள் 'முகில்வண்ணா: எந்த ஆயுதத்துக்கும் அஞ்சாத நாங்கள் உமது சக்கரப்படைக்கு மட்டும் அஞ்சுகிறோம். அப்படைக்கும் அயரா வரம் தந்து அருள வேண்டும். " என்று வேண்டினார். திருமாலும் அவ்வாறே அருள் செய்தார். வரம் பெற்ற ஐவரும் எதிர்ப்பாரின்ரி அகந்தை கொண்டு விரும்பியது விரும்பியபடி உலகெங்கும் பெற்றுக்களித்துத் திரிந்தனர். ஒரு நாள் பாதாள லோகம் சென்றனர். அசுர குரு சுக்கிராச்சாரியாரின் ஆசிரமத்துள் அச்சமின்றி நுழைந்தனர். அங்கு சுக்கிராச்சாரியாரின் மகள் சோமை இருக்கக் கண்டனர். ஈடில்லா அவள் அழகைக்கண்டு ஐவரும் அவள் மீது மையல் கொண்டனர். அவளிடம் போய்த் தமது வீரப்பிரதாபங்களை யெல்லாம் சொல்லித் தம்மில் ஒருவரை மணக்குமாறு வற்புறுத்தினர். இக்கொடுஞ் சொற்கேட்ட சோமை சினங்கொண்டு "உங்கள் குருவின் மகள் என்பதை அறிந்தும் சொல்லத்தகாத வார்த்தைகளைப் புகன்றீர். இக்குற்றத்துக்குத் தண்டனையாக நீங்கள் என் போன்ற ஒரு பெண்ணாலேயே போரில் பலமிழந்து மடிவீர்கள்" எனச் சாபமிட்டாள். சாபத்தால் தாக்குண்ட அசுரர்கள் அப்போதே பலமிழந்து உடல் மெலிந்து துன்புற்றனர். அதிலிருந்து மீள அரனை நோக்கித் தவம் செய்தனர். இவர்களது கடுமையான தவத்துக்கு இரங்கி சிவபெருமான் நேரே தோன்றி ' வேண்டும் வரம் யாது/' என்று வினவினார். அரக்கர் ஐவரும் பெருமானை வணங்கிப் ' பெருமானே! எங்கள் குருதியை தேவர்களும் மற்றவர்களும் தமது உடம்பில் அணிந்து அழகு படுத்திக் கொள்ள வேண்டும்' என்று இறைஞ்சினர். சிவபெருமானும் அவ்வாறே வரமருளி மறைந்தார். இந்த வரலாற்றுப்படியே இந்த அசுரர்களின் வாழ்க்கை முடிந்தது.

தேவலர் மணிமுடி சூடியது :

ஆமோத நகரம் சகர நாட்டின் தலைநகரம்.அதைச்சுனாபன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவன், தேவல முனிவர் தன்னாட்டை நோக்கி வருவதை இறைவன் உணர்த்த உணர்ந்தான். முனிவரை வரவேற்க மந்திரி பிரதானிகளுடன் நர்ப்புறம் போய் நின்றான். முனிவரும் வந்தார். வந்தவரை மன்னன் வரவேற்று 'இந்த நாட்டைத் தாங்களே ஏற்று ஆட்சி செய்ய வேண்டும். இறைவன் திருக்குறிப்பும் அதுவே' என்று வணங்கினான். முனிவரும் இறைவன் திருக்குறிப்பு என்பதை ஓர்ந்து இசைந்தார். ஊர் மக்களும் பிறரும் நல்வரவு கூர மேளவாத்தியம் முழங்க ஆடல் பாடல்கள் நிகழ முனிவரை யானைமீது அமர்த்தி ஆமோத நகரருக்குள் ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. மன்னன் முனிவரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று அரியாசனத்தமர்த்தி உபசரித்தான். இரண்டொரு நாட்கள் விருந்து உபசாரங்கள் நடந்தன. பின் மன்னன் தேவலரை மணிமுடி சூடி நாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். முனிவரும் இசைந்தார். சுனாபமன்னன் ஒரு நல்ல நாளில் நாட்டை அலங்கரிக்கச் செய்து வாத்தியங்களும் வேத கீதங்களும் முழங்க தேவல முனிவரை அரசுக்கட்டிலில் அமர்த்தி முடி சூட்டி அரசுரிமையை அளித்தான். பின் நாட்டை விட்டுச் செல்ல தேவலரிடம் விடை கேட்டான். அதைக் கேட்ட தேவலர் ' தாங்கள் ஏன் செல்ல வேண்டும்? என்னோடேயே இருக்கலாமே ' என்றார். அதற்குச் சுனாபன் ' நான் பிரிந்து செல்லக் காரணம் உளது ' என்று கூறித் தன் வரலாற்றைக் கூறினான்

தேவலர் தோற்றம் :

மறைமுடிவாய் விளங்கும் சிவபெருமானின் புகழெலாம் திரண்டு ஒன்றாகி, அடியவர்கள் விரும்பும் வீடுபேற்றை அருளும் திருக்கயிலை ஒளிபெற்று விளங்கியது. 

இதில் கோடி சூரியப் பிரகாசமாய்ப் பொன்னாலும் மணியாலும் ஆன அரியாசனத்தில் அம்மை அப்பர் கொலு வீற்றிருந்தனர். அப்போது தேவர், அசுரர், கந்தருவர் வித்தியாதரர் கின்னரர் இயக்கர் முனிவர் சித்தர் நாகர் கிம்புருடர் முதலியோர் சூழ்ந்திருந்து பெருமானைப் போற்றி இசைத்த புகழ் ஒலி எங்கும் பரவ ஒலித்துக் கொண்டிருந்தது. 

முற்றுந் துறந்த முனிவர்கள் பலர் ஐம்புலனும் அகத்தடக்கி ஆங்காங்கு அமர்ந்து தவஞ்செய்து கொண்டிருந்தனர். 

படிவோர் பாவங்களை அறவே அறுக்கும் புண்ணிய தீர்த்தங்களும், அழகிய மலர் வாவிகளும் நிரம்பி இருந்தன. இவற்றின் இடையே முனிவர்கள் நீராடித் தவஞ் செய்வதற்கேற்ற புஷ்கரதீர்த்தம் என்னும் சுனை இருந்தது. நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு நைமிசாரண்ய முனிவர்கள் சுனையின் கரைமீது அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே சூத முனிவர் வந்தார். வந்தவரை முனிவர்கள்வரவேற்று உபசரித்து. அவரிடம் பிரம்மாண்ட புராணத்தில் உள்ள தேவாங்க முனிவரின் புண்ணிய சரிதத்தை கூரியருளுமாறு வேண்டினர். 

சூத முனிவரும், ' கேட்பவர்கள் பாவத்தைப்போக்கி வீடுபேறளிக்கும் புண்ணிய சரிதமாகிய தேவல முனிவரின் சரிதத்தைப் பயபக்தியுடன் கேட்பீர்களாக ' என்று கூறிச் சரிதத்தைச் சொல்லத் தொடங்கினார். 

கயிலையில் சிவபெருமான் அம்மையுடன் கொலுவீற்றிருந்தார். உலகைப் படைக்கத் திருவுளம் பற்றினார். அருகிருந்த அம்மையை நோக்கினார். அப்போது அன்னைபராசக்தி ஒளிவடிவாக முக்குணவடிவில் தோன்றினார். உடனே ரஜோகுணத்தில் பிரம்மாவும் சத்துவகுணத்தில் திருமாலும் தமோகுணத்தில் உருத்திரனும் தோன்றினர். மூவருக்கும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களை முறையே செய்யும் பணியைச் சிவபெருமான் அளித்தார். 

பிரம்மதேவன், திருவருளின் துணையால் செடிமுதற் கொண்டு மனிதன் ஈறாக உள்ள பல்வேறு மநுவையும் படைத்தார். மநு என்னும் இம்மன்னன் எல்லாரும் உடுக்கும்படியாக ஆடைகளைக் காம்பிலி நகரிலிருந்து தயாரித்து அளித்து வந்தான். 

செய்து வந்த அருட்தொண்டின் சிறப்பாலும் தவம் பொறை கருணை மூதறிவு சினமின்மை முதலான நற்குணங்கள் உடையவராய் இறைவனை எல்லையில்லா பக்தி பூண்டு வழுத்தி அருச்சித்து வந்ததாலும் இவர் பிறவிக்கு ஏதுவாகிய வினைமுற்றிலும் நீங்கப்பெற்றுத் திருவருளுக்கு உரியவரானார். உரிய காலத்தில் திருவருட்டுணை கொண்டு சிவனடி சேர்ந்தார். 

" அனைய வன்பெருந் தவம் பொறை கருணைமூ தறிவு சினம கன்றபற் பலகுணத் தெவரினுஞ் சிறந்துன் மனமு வந்திட வழுத்தியர்ச் சித்த தான் மயக்க வினைத விர்ந்தசா யுச்சியமாம் பதத்தின் மேவினனால் " 

மநுவுக்குப் பின் ஆடைகளை நெய்து அளிப்பாரின்ரி தேவர்களும் மக்களும் மிகுந்த வருத்தத்தோடு இலைகளையும் தழைகளையும் மரவுரியையும் அணிந்து மானங்காத்து வந்தனர். இது யாவருக்கும் பெருங்குறையாயிருந்தது. அதனால் தேவர்கள் யாவரும் ஒன்று கூடி தங்கள் குறையை முறையிட்டுக்கொள்ள பிரம்மாவுடன் திருக்கயிலை அடைந்தனர். சிவபெருமானை அணுகி ஆடையில்லாமல் தாங்கள் படும் அவதியை எடுத்துக் கூறினர். தேவர்களின் குறைகேட்ட சிவபெருமான் யாதும் பேசாது மௌனந் தாங்கினார். அப்போது அவர் உள்ளத்தினின்றும் தேவர்கள் போற்ற காரிருள் ஓட்டும் முழுமதியன்ன ஒரு பேரொளி தோன்றி அது இமைக்கும் நேரத்தில் ஒரு ஆண் உருப்பெற்று நின்றது. 

இவ்வாறு ஆணழகனாக நின்ற அவன், தனது அகன்ற மார்பில் முப்புரி நூலும், அங்கங்களில் திருநீறும் கண்டிகையும், கரத்தில் கமண்டலமும், விரலில் பவுத்திரமும் தாங்கி நின்றான். 

தேவர்கள் துயர்துடைக்க வந்த இவன் பொறுமை மாதவம் புண்ணியம் கருணை நல்லறிவு உறுதி நீதி பேரின்பம் உண்மை புகழ் ஒழுக்கம் சீலம் முதலான நற்பண்புகளெல்லாம் ஒன்றாய்த் திரண்ட ஒரு உருவாய் இருந்தான். 

இவன் அரும் பெரும் கலைகளுக்கெல்லாம் கடல் போன்றவன். சிவபக்தியிற் சிறந்தவன். இத்தகைய குண நலங்களெல்லாம் ஒருங்கே பெற்று குணக்குன்றாய் நின்ற இவன் சிவபெருமான் திருவடிகளில் பணிந்திறைஞ்சி தலைமேல் இரு கைகூப்பி 

பாலலோசனா பழமறைக் கரியபொற் பாதா சீல மாமுனி வராரி யயன்பல தேவர் கோல மார்தரு சராசர மனைத்துமுன் கொடுத்த மூல காரண நிர்விகா ரத்தினி முதலே 

பருவ மாமுகில் பொருகருங் குழலுமை பாகா வொருவ ராயினு முனர்வதற் கரியபே ரொளியே இருளுறவகை எனைஅரு ளாலெடுத் தாண்ட குருப ராவுயிர் தொருநிறை குணப்பெருங் குன்றே 

மனைமு தற்பல மயலிடைச் சுழன் ருபுன் மாயை வினையி ருட்கடல் படிந்தவர் தமக்கெதிர் மேவா உனைய டுத்துநின் னுளத்தொடு கலந்தினி துறையும் எனைநி னைத்துவே றழைத்தகா ரணமெவ னெந்தாய் 

அடுத்த பஞ்சபூ தங்களாற் சமைத்தவிவ் வாகம் எடுத்த லைந்துமூ தறிவினைத் துறந்தபே ரின்பந் தடுத்து நொந்திடர்க் கடற்படிந் திடமனஞ் சகியேன் தொடுத்த செஞ்சுடர் மணியர வணிபுனை தூயோய் 

என்று வினயமாய்ப் பணிந்து நின்றான். 

அதற்குப் பெருமான் புன்னகை பூத்தவண்ணம் ' இவ்வுலகுக்கு நீ செய்யவேண்டிய அரும்பணி ஒன்று உளது. அதற்காகவே உன்னை அழைத்தோம்; வருந்தாதே. நீ ஆறு பிறவிகள் எடுத்து உலக இன்பங்களை நுகர்ந்து புகழ் பெற்று ஏழாம் பிறவியில் வீடுபேறு அடைவாய். இப்போது நீ தேவலன் என்னும் பெயரைப் பெறுவாய். நீ திருமாலிடம் சென்று அவர் உந்திக்கமலத்தில் உள்ள நூலைப்பெற்று ஆடைகளை நெய்து அனைவருக்கும் அளிப்பாயாக. தேவர்களின் அங்கங்களை உன் ஆடைகள் அலங்கரிப்பதால் உனக்குத் தேவாங்கன் என்ற பெயரும் வரும். நீ ஆமோத நகரை ஆட்சி செய் ' என்று அருளினார். தேவலன் என்றால் தெய்வ வல்லமை உடையவன் என்பதும் பொருளாகும்.